Thursday, July 30, 2015

வென்றே தீரும்






8







(ஒரு திறந்த மடல் ...
அமெரிக்கன்கல்லூரி 
'முதல்வருக்கு' )



இநத நேரத்தில் இக்கடிதம் தங்களுக்கு எதிர்பாராத ஒன்றாக  இருக்கலாம். இருப்பினும் சில கருத்துக்களைக் கூறவேண்டிய கடமை எங்களுக்கும் இருப்பதாக எண்ணுவதால் இதை எழுதுகிறோம். திறந்த மனதுடன் படியுங்கள் . மனசாட்சிக்கு மதிப்பளித்து முடிவெடுங்கள்.


 
A ROYAL PARADE...! 

WHAT AN ACHIEVEMENT !

பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய காட்சியல்லவா இது?
***



இவர்கள் நம் கல்லூரி மாணவர்களா
என்ற நெஞ்சையறுக்கும் கேள்விகளை எழுப்ப வைத்த
உங்கள் சாதனை இது தான்.

நீங்கள் வந்த வழி இது தான் என்பதை
மறந்திருக்க மாட்டீர்கள் என
நம்புகிறோம்.



காலம் சென்ற தங்களது மாமனார்- பேராயர். திரு. கிறிஸ்டோபர் ஆசிர் அவர்களின் ஆசியுடனும் உதவியுடனும் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து, விதிமுறைகளை மீறி, பாரம்பரியங்களைத் தூக்கி எறிந்து, 135 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்கன் கல்லூரியில் நீங்களும் முதல்வராக பதவியேற்று சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அமெரிக்க இறை அடியார்களின் தியாகம், தொண்டு, உழைப்பினால் உருவாகி, வளர்ந்து மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்விப்பணி புரிந்த இக்கல்லூரியில் இன்று முதல்வர் பதவியில் இருக்கும் தங்களுக்கு அதற்குரிய தகுதி, திறமை, அனுபவம் என்று ஏதேனும் இருக்கிறதா என்று சிறிது எண்ணிப் பாருங்கள். உண்மை-விளங்கும். 




பண பலம். ஆள் பலம், மற்றும் அரசியல் பலத்தோடுதிருச்சபை தலைவர்களின் பொய் பித்தலாட்டங்களின்  துணையுடன் பூட்டை உடைத்து 




இப்பதவியில் வந்து அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கும் தெரியும்; உலகுக்கும்  தெரியும்.








'நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும், எதற்கு வீண் வம்பு' என மௌன குருக்களாகவும், 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன?” எனத் தத்துவ நிர்வாணிகளாகவும், பதவிக்காகத் துதிபாடுபவர்களாகவும் அமெரிக்கன் கல்லூரி, பேராசிரியர்களை எண்ணிவிடாதீர்கள். அமெரிக்கன் கல்லூரியில் அச்சத்தை எற்படுத்தி, அதன்முலம் எல்லாமே நன்றாக நடந்துகொண்டிருக்கிறது என்ற கதையை நீங்கள் வெளி உலகிற்கு இன்னும் வெகுகாலம் சொல்லமுடியாது என்பதுதான் உண்மை.

மதுரைக்கு மணி மகுடமாய் விளங்கிய அமெரிக்கன் கல்லூரியின் சிறந்த பாரம்பரியங்கள் சிதைக்கப்பட்டு, தனித்தன்மைகள் புதைக்கப்பட்டு இன்று 
உடைந்து நொருங்கிக் கிடக்கும் 

கல்லூரியின் நற்பெயரும் பாரம்பரியமும்
அசுர வேகத்தில் அது ஒரு வணிக வளாகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலை கண்டு, 'ஏன் இப்படி? என்று அதிர்சியடையாத மாணவர்கள், ஆசிரியர்கள் , நண்பர்கள்- இருக்க முடியாது. அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் ரூ.1,500க்குப் பதிலாக  ரூ.8,500 நீங்கள் வசூலிப்பது குறித்து வேதனைக் குரல்கள் நாலா பக்கங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அதுபோக, இங்கு மாணவர் சேர்க்கையில் ஆயிரங்கள், ஆசிரியர் நியமனத்தில் இலட்சங்கள் என்று எப்படி எப்படியெல்லாம் சுருட்ட முடியுமோ அப்படியெல்லாம் சுருட்டுகிறீர்கள் என்று கேள்விப்படுகின்ற போது ' கல்விக்கோயிலாக திகழ்ந்த அமெரிக்கன் கல்லூரிக்கு  ஏன் இந்த நிலை எனத் தோன்றுகிறது. இது கொடுமையிலும் கொடுமை. மேலும், தரம், தகுதி, திறமைக்கு மதிப்பளிக்காமல், 'வேண்டியவர்கள், உறவினர்கள், ஏரியாக்காரர், ஜாதிக்காரர் என்ற அடிப்படையில் முன்னுரிமையும் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன என்றும் கேள்விப்படுகிறோம். இதனால் கல்லூரியின் கல்வித்தரம் அதல பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

ஒருபுறம் வருமானத்தை பெருக்கவேண்டுமென்ற வணிக நோக்குடன் வந்துள்ள எண்ணற்ற சுயநிதி பாடப்பிரிவுகள்; வகுப்புகளில் வரம்பு மீறிய மாணவர் எண்ணிக்கை; எகிறும்  விடுதி/தேர்வுக் கட்டணங்கள் என்று உள்ளதாகவும் மறுபுறம் இவற்றையெல்லாம் மாணவர்கள் தட்டிக்கேட்க முடியாதபடி ஒரு அச்சம் நிறைந்த அசாதாரண சூழல் இருப்பதாகவும் அறிகிறோம். பெற்றோர்களும், 'ஒரு காலத்தில் எப்படி இருந்த கல்லூரி இன்று இப்படி ஆகிவிட்டதே. நல்ல தரமிக்க கல்வி கிடைக்குமென்றுதான் இக்கல்லூரியில் சேர்த்தோம். ஆனால் இப்பொழுது வருந்துகிறோம்” என்று புலம்புவது கல்லூரியின் மீது அன்பு கொண்டவர்களை   வேதனையில் ஆழ்த்துகிறது; வெட்கித்தலை குனிய வைக்கிறது.

திரு. தவமணி அவர்களே, தங்களுடைய கல்வித் தகுதி பற்றிய கேள்விகளுக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. அதுகுறித்து வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அவற்றிற்காக நீங்கள் செலவுசெய்த கல்லூரிப் பணம் அரைக்கோடி இருக்குமா? வழக்குகள் முடிந்து விடாமல் தள்ளிக்கொடுத்தே, ‘நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக ஒப்புதலுடன்’ முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நான்குவருடத்திற்குப் பின்னும் கல்வித்தகுதியை நிரூபிக்கமுடியாமலும், படிவம்-7 இல்லாமலும் நீங்கள் இன்னும் எத்தனை நாள் PRINCIPAL&SECRETARY என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?  எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் PHD “போலியானது” என்றும் உங்கள் ரெக்கார்ட்டில் “முறைகேடாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என்றும்  சம்பந்த்தப்பட்ட பல்கலைக்கழகம் எழுத்துப்பூர்வமாகக் கூறியபின்பும் எப்படி நீங்கள் சுதந்திரமாக வெளியே உலாவிக்கொண்டிருக்கிறீர்கள்? அதுவும் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் என சொல்லிக்கொண்டு?

எங்கு பார்த்தாலும் ஏ.சி., புதிய புதிய சொகுசு கார்கள், பேருந்துகள் என கல்லூரிப் பணம் கண்டபடி வாரி இறைக்கப்படுகிறது.  ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிர்வாகப் பிரிவு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர்க்குக் கொடுக்கப்பட வேண்டிய பதினெட்டு மாத சம்பள நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. ஊழியர் பலரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இது அநியாயத்திலும் அநியாயம். கொடுக்கவேண்டிய பணத்தை சீக்கிரம் கொடுக்கவேண்டியது உங்கள்’கடமையாகும்.


மனிதாபமில்லாமல், குற்ற உணர்வு சிறிதுமின்றி, கொடுத்த வாக்குறுதிகள் மீறப்படுகின்றன- ஆனால், கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் அன்பின் ஆண்டவர் இயேசுவின் வேத வசனங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதிகாலை வழிபாடு, ஜெபம் என்று உங்கள் அக்கிரமங்களை மறைக்க பக்தி வேஷம் போடுகிறீர்கள். கடவுளை கை/பைக்குள் போட்டுக்கொள்ளலாம் என்ற நினைப்பில் கபடமாடுகிறீர்கள்.

தயவுசெய்து ஆமோஸ் 5:21-24 படியுங்கள்:

"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கிறேன். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்கமாட்டேன். என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள் .உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க  மாட்டேன்.
மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக!
நேர்மை, வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!”


ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்: 

உண்மையும்  நேர்மையும் தோற்பது போலத்  தோற்றமளித்தாலும் இறுதியில் உறுதியாக வெல்லும் . அதற்காக பாடுபடுவோரின் முயற்சிகள் நிச்சயம் வீணாகப் போகாது.

அமெரிக்கன் கல்லூரிக்கான இப்போராட்டம் வென்றே தீரும்.


அன்புடன்

தா. சாமுவேல் லாரன்ஸ்
கோ.வேத.சுவாமிநாதன்

அமெரிக்கன் கல்லூரி முன்னாள் துணை-முதல்வர்கள்